அணையா விளக்கு அன்னை பூபதித்தாய் - Remembering Annai Pupathi

21 Views
தமிழன்
தமிழன்
08 May 2024

⁣/உன் துப்பாக்கி மிரட்டல்களுக்கெல்லாம் இந்தப்பூபதி அசையமாட்டாள்”என்கிறார் அன்னை பூபதி.களைத்துப்போன அந்த முகத்தில் உறுதியும் தீரமும் பளிச்சிடுகின்றன.
உடல் களைத்ததே தவிர உள்ளம் களைக்கவில்லை.//

மட்டக்களப்பின் நகரின் பல பகுதிகளிலும் இந்தியப்படைகள் முகாம்கள் அமைத்துத் தங்கியிருந்துகொண்டு சொல்லமுடியாத கொடுமைகளைச் செய்தன.தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாகப்புகுந்து வெறித்தாண்டவம் ஆடினார்கள்.உடைமைகள் சூறையாடப்பட்டன.வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.சந்தேகத்திற்குரிய இளைஞர்கள் உடனடியாகச் சுட்டுக்கொல்லப்பட்டனர்.எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இராணுவத்தினர் பெண்களிடம் மிருகத்தனமாக நடந்துகொண்டனர்.பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சினர்.

மட்டக்களப்பு வெள்ளைப்பாலத்தில் நடந்துபோய்க் கொண்டிருந்த இரு இளம்பெண்களை இந்திய இராணுவச் சிப்பாய்கள் விரட்டிப்பிடித்து அருகில் இருந்த கடைக்குள் இழுத்துச்சென்று பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார்கள்.இச்செய்தி நகரமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.இத்தகைய கொடுமைகளை இனியும் பொறுத்திருக்கமுடியாதென தாய்மார்கள் கொதித்தெழுந்தனர்.

தியாகி திலீபன் காட்டிய வழியில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதென அன்னையர் முன்னணி முடிவு செய்தது.

1-இந்தியப்படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டும்.
2-விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து மாமாங்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக குருந்தமர நிழலில் அன்னையர் முன்னணியின் உண்ணாநோன்புப் போராட்டம்
தொடங்கப்பட்டது.தொடக்கத்தில் இந்திய இராணுவ அதிகாரிகள் அதனைஅலட்சியப்படுத்தினர்.
ஆனால் உண்ணாநோன்புப் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு நகரில் மட்டுமன்று மாவட்டம் முழுவதிலும் உள்ள பெண்களும் மாணவிகளும் ஆர்த்தெழுந்ததைப் பார்த்தவுடன் அவர்கள் திகைத்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தைப் பார்க்கவும் ஆதரவு தரவும் மக்கள் அணி அணியாக அங்கு வரத்தொடங்கினார்கள்.இப்போராட்டத்தை திசைதிருப்பவும் மக்களை மிரட்டவும் இரகசியத்திட்டம் ஒன்றை இந்திய இராணுவம் சிங்களக் காவல்துறையுடன் சேர்ந்து வகுத்தது..

மட்டக்களப்பு மாநகரச்சந்தை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த வேளையில் சிங்களக்காவல்துறை திடீரெனச் சந்தையைச் சுற்றிவளைத்து கண்மூடித்தனமாக மக்களைத் தாக்கியது.
ஏராளமான மக்கள் குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் ஆகியோர் பலத்த காயங்களுக்கு ஆளாகினார்கள்.குருதி கொட்டியது.அப்பொழுதும் சிங்கள வெறியர்களது ஆத்திரம் அடங்கவில்லை.
கலைந்தோடிய மக்கள்மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டார்கள்.சந்தையெங்கும் பிணக்குவியலும் மக்களின் ஓலமுமாகக் காட்சிதந்தது.இவ்வளவு கொடுமையையும் இந்திய இராணுவம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.இதுவும் மக்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியிருந்தது.

அன்னையர் முன்னணி தங்கள் உண்ணாநோன்பு போராட்டத்தை தொடர் உண்ணாநோன்புப் போராட்டமாக மாற்றித் தீவிரப்படுத்தியது.நாள்தோறும் ஏராளமான பெண்களும்,மாணவிகளும் போராட்டத்தில் புதிய உத்வேகத்துடன் குதித்தனர்.இது ஒரு மக்கள் போராட்டமாக வெடித்தது கண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அதிர்ச்சியடைந்தார்.

“இந்திய அமைதிப்படை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை
விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே போராடுகிறது” என வானொலிமூலம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவருடைய அறியாமையைக் காட்டியது.மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறல்ல.மக்களிலிருந்தே புலிகள் தோன்றி மக்களைக்காக்கப் போராடுகிறார்கள் என்ற உண்மையை அவர் உணரவில்லை.எனவே அவருடைய அறிவிப்பால் அன்னையர்கள் மனம்மாறிவிடவில்லை.

1988 ஆம் ஆண்டு சனவரி 7 ஆம் நாளன்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி அன்னையர் முன்னணியை இந்திய இராணுவத்தினர் அழைத்தனர்.அதனை ஏற்று அன்னையர்கள் திருகோணமலைக்குச் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

பிரிகேடியர் சண்டேஸ் என்னும் உயர் அதிகாரி இந்திய அரசு சார்பில் கலந்துகொண்டு “புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும்.அதற்குப்பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும்”என்று கூறினார்.

“எங்கள் நகைகளைக்கொடுத்து எங்களைக்காக்க எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்?”என்ற சூடான வினா அன்னையரிடமிருந்து கிளம்பியது.

பிரிகேடியர் சண்டேஸ் வாயடைத்துப் போனார்.பேச்சுவார்த்தை முறிந்தது.உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.

அன்னையர் முன்னணியினர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைக்கப்பட்டனர்.பெப்ரவரி 10 ஆம் நாளன்று கொழும்பில் இந்தியத் தூதுவர் டிக்சிற் அன்னையர் முன்னணியினர்களுடன் பேசினார்.ஆயுதங்களைக்கொடுக்க வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடினார்.அவருடைய மிரட்டலுக்கு அன்னையர் அஞ்சவில்லை.மீண்டும் பேச்சுவார்த்தை முறிந்தது.
#அன்னைபூபதி

Show more

0 Comments Sort By

No comments found

Up next